Friday, August 30, 2013

தமிழக அரசியல் - பாகம்-1


தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.

தமிழ் நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன. காங்கிரசு கட்சிஅகில இந்திய பார்வார்ட்டு பிளாக் , மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி,மற்றும் முஸ்லீம் லீக் ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.

அகில இந்திய பார்வார்டு பிளாக் ஆரம்பிக்கப்பட்ட 1939 முதல் 1963 வரை அதன் தமிழக தலைவராக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இருந்தார். தந்தை பெரியார் என்று அறியப்படும் ஈ.வெ.ராமசாமி 1916இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா தோற்றுவித்தார். 1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ்நாட்டை இந்திய தேசிய காங்கிரசு ஆண்டது. 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ம. கோ. இராமச்சந்திரன் தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.

1967 முதல் 2011இல் கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தல் வரை தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள் பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன. தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உண்டு என்றாலும், இதுவரை தனிக் கட்சி ஆட்சியே நடைபெறுகிறது. முதன் முறையாக தி.மு.க. ஒரு அறுதிப் பெரும்பான்மையற்ற சிறுபான்மை அரசாகச் (2006-2011) செயல்பட்டது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் செல்வாக்கோடு விளங்கி கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும்,பங்கேற்கவும் செய்கின்றன.

தி.மு.க.வின் 2006-2011 ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகத்தின் நலன், இலங்கைத் தமிழர் பிரச்சினை, இட ஒதுக்கீடு, காவிரி ஆற்றுநீர்ப் பங்கீட்டு பிரச்சினை, விவசாயிகள், பாமரர் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நலன், ஊழல், கையூட்டு, நிதிமோசடி, சாதி அரசியல் ஆகியவை தமிழ் நாட்டு அரசியலில் முதன்மைத்துவம் கொண்டிருந்தன. பின்னர் குடும்ப அரசியலும் முக்கியத்துவம் பெற்றது.

2011இல் நடந்த சட்ட மன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அமைச்சரவை 2011, மே மாதம் 16ஆம் நாள் ஆட்சிப்பொறுப்பேற்றது. இத்தேர்தல் முடிவுகள் தி.மு.க. ஆட்சிமீது மக்கள் அடைந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதாக நாளேடுகள் செய்தி வெளியிட்டன.

தி.மு.க.வின் தோல்விக்குக் காரணங்களாகக் காட்டப்படுவை:

  • கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் எங்கும் நிலவிய மின்வெட்டு
  • விலைவாசி உயர்வு
  • அரசியலில் ஆட்சிக் குடும்பத்தினரின் ஆதிக்கம்
  • திரைத்துறையில் ஆட்சிக் குடும்பத்தினரின் தலையீடு
  • ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்காதது
  • இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேட்டில் (2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்) தி.மு.க. மைத்திய அமைச்சர் ஆ. ராசா பங்கேற்றதாக எழுந்த குற்றச்சாட்டு
  • நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் அ.இ.அ.தி.மு.க.வோடு கூட்டணி ஏற்படுத்தியது

No comments:

Post a Comment