Friday, August 30, 2013

தமிழகம் - கல்வி அறிவு மற்றும் சமூக வளர்ச்சி





               பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன் 1957ம் ஆண்டில் அறிமுகப்படுத்திய மதிய உணவுத் திட்டமே தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. மத்திய அரசு சமீபத்தில் தான் ( கடந்த 2004ம் ஆண்டு) பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிவித்தது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பே இதைச் செய்து தமிழகத்தின் கல்வி, சமூக வளர்ச்சியில் பெரும் புரட்சி செய்தார் காமராஜர்.


     சென்னையில் அமைந்த இந்தியத் தொழில்நுட்பக் கழக (IIT) முதன்மை நுழைவாயில். இலச்சினையும் குறிக்கோளுரையும்


கிண்டி பொறியியல் கல்லூரி சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக முதன்மை வளாக பரப்பில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் பழமையான நுட்பவியல் கல்லூரி.

சமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான (மனித வளர்ச்சிச் சுட்டெண்) பரவலான கல்வியறிவு, ஆண் - பெண் சமத்துவம், மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது.

தமிழ்நாட்டு மக்களின் கல்வியறிவு இந்தியாவின் சராசரியைவிட அதிகம். இங்கு 2001-2011 காலக் கட்டத்தில் 74.04%ல் இருந்து 80.33% என்று கல்வியறிவு அதிகரித்தது. இன்று தமிழ்நாட்டில் 86.81% ஆண்களும் 73.86% பெண்களும் கல்வியறிவுடையவர் ஆவர். தமிழ்நாட்டில் 37 பல்கலைக்கழகங்கள், 454 பொறியியல் கல்லூரிகள், 1150 கலைக் கல்லூரிகள், 2550 பள்ளிக்கூடங்கள் மற்றும் சுமார் 5000 மருத்துவமனைகள் உள்ளன. இங்கு இரண்டு நடுவண் அரசு கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை சென்னையில் அமைந்த இந்திய தொழில்நுட்பக் கழகம், மற்றும் திருச்சியில் அமைந்த தேசிய தொழில்நுட்ப கழகம் ஆகும். மேலும் புகழ்மிக்க சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்,அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், வேலூர் கிருத்துவ மருத்துவ கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர், இலயோலாக் கல்லூரி ஆகியனவும் உள்ளன. தமிழகத்தில் வருடந்தோறும் 1,30,000 பேர் பொறியியல் படிப்பு முடித்து தேர்ச்சி பெறுகின்றனர்.

இந்தியாவின் மிகவும் அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலங்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டின் கல்வியறிவு வீதம் 2011 கணக்கெடுப்பின்படி 80.33% ஆகும். இவ்வீதம் தேசிய சராசரியை விட அதிகமாகும். ஒரு தொழிலக நிறுவனமான அஸ்சோசம் தமிழ்நாட்டை ஆரம்பப் பள்ளியிலும், உயர் தொடக்கக் கல்வியிலும் (primary and upper primary education) இந்திய மாநிலங்களில் முதலாவதாக 100% அளவுடன் மொத்த பதிவு விகிதத்தில் (Gross Enrollment Ratio; GER) மதிப்பிடுகிறது.

 

பள்ளிக் கல்வி

தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்கள்

தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பு தேசிய அளவுத் திட்டமான 12 ஆண்டு பள்ளிப் படிப்பைப் (10+2+3) பின்பற்றுகிறது. இதில் 8 ஆண்டுகள் இடைநிலைக் கல்வி கற்றுத்தரப்படுகிறது. இதில் 5 ஆண்டுகள் தொடக்கக் கல்வியும் 3 ஆண்டுகள் நடுநிலைக் கல்வியும் அடங்கும். இதில் 6-11 வயது வரையுள்ளோர்க்கும் 11-14 வயது வரையுள்ளோர்க்கும் கல்வி அளிக்கப்படுகிறது. பின்னர் உயர்நிலைக் கல்வி 2 ஆண்டும் மேல்நிலைக் கல்வி 2 ஆண்டும் கற்றுத் தரப்படுகிறது. பள்ளியில் நுழைவதற்கான வயது (முதல் வகுப்பு) 5+ ஆக உள்ளது. மேல்நிலைக் கல்வி இறுதி வகுப்புச் சான்றிதழ் (Higher secondary school leaving certificate) மாணவர்களை அவர்களது உயர்கல்வியைப் பல்கலைக்கழகங்களிலோ கல்லூரிகளிலோ படிக்க வகை செய்கிறது. இந்த உயர்கல்வியானது பொதுக் கல்வியாகவோ தொழில்நுட்பப் படிப்பாகவோ தொழில்நிலைக் கல்வியாகவோ (professional) இருக்கும்.

தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம்

தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் 1910ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கல்வித் துறையினால் ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு பள்ளித் தேர்வுகளுக்கான மாநில வாரியம் மாணவர்களின் முன்னேற்றத்தை இரண்டு (2) பொதுத் தேர்வுகளை நடத்துவதன் மூலம் கணக்கிடுகிறது. இதில் ஒன்று 10ஆம் வகுப்பின் இறுதியிலும் (இடைநிலைக் கல்வி இறுதி வகுப்புச் சான்றிதழ்; Secondary school leaving certificate; SSLC) மற்றொன்றை 12ஆம் வகுப்பின் இறுதியிலும் (மேல்நிலைக் கல்வி இறுதி வகுப்புச் சான்றிதழ்; Higher secondary school leaving certificate; HSC) நடத்துகிறது. இதில் 12ஆம் வகுப்பில் நடத்தப்படும் தேர்வு மதிப்பெண்கள் மாணவர்கள் உயர்கல்வியில் நுழைவதற்கு உதவுகின்றன.

பயிற்று மொழி

அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன.

தர நிர்ணயம்

அனைத்து அங்கீகரிப்பட்ட பள்ளிகளும் பின்வரும் ஏதேனும் ஒரு அமைப்பின் அங்கீகாரத்தைப் பெற்றவையாக உள்ளன:
  • நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் - அனைத்து நிலை படிப்பிற்கும்
  • தமிழ்நாடு மாநில வாரியம் - அனைத்து நிலை படிப்பிற்கும்
  • இடைநிலைக் கல்விகான இந்தியச் சான்றிதழ் - அனைத்து நிலை படிப்பிற்கும்
  • பதின்நிலைப் பள்ளிகள் இயக்ககம் - 1 முதல் 10ஆம் வகுப்பு வரை. 11, 12 ஆகியவை மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.
மாண்டிசொரி முறையில் இயங்கும் பள்ளிகளுக்கும் அமெரிக்க முறையில் இயங்கும் பள்ளிகளுக்கும் இவ்விதிமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இயக்ககங்கள்

கல்வித் துறை அமைச்சரே மாநிலத்தின் ஒட்டுமொத்த கல்வி நிலைகளுக்கும் உறுப்பினர் ஆவார். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பின்வறும் இயக்ககங்கள் உள்ளன.
  • தொடக்கக் கல்வி இயக்ககம்
  • மாநிலத் திட்ட இயக்ககம், மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம்
  • பள்ளிக் கல்வி இயக்ககம்
  • அரசுத் தேர்வு இயக்ககம்
  • ஆசிரியர் கல்வி இயக்ககம், ஆய்வும் பயிற்சியும்
  • முறைசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம்
  • பொது நூலகங்கள் இயக்ககம்
  • ஆசிரியர் வேலையெடுப்பு வாரியம்
  • தமிழ்நாடுப் பாடநூல் கழகம்

உயர் கல்வி


தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி


இந்தியாவின் பழமையான கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

தமிழ்நாட்டில் 37 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 450+ பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 1150 கலைக்கல்லூரிகளும் 2550 பள்ளிகளும் 5000 மருத்துவமனைகளும் உள்ளன. இவற்றுள் சில மிகவும் புகழ்பெற்றவை. அவற்றுள் சென்னைப் பல்கலைக்கழகம், ஐஐடி மெட்ராஸ், அண்ணா பல்கலைக்கழகம், பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரி, என்.ஐ.டி. திருச்சி, பெரியார் பல்கலைக்கழகம், சேலம், சென்னை கிருத்துவக் கல்லூரி, வேலூர் தொழில்நுட்பக் கழகம், பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், மதராசு மருத்துவக் கல்லூரி, லயோலா கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முதலியவை அடங்கும். கிட்டத்தட்ட 1,75,000 என்ற உயர் அளவிலான பொறியியல் பட்டதாரிகளைத் தமிழ்நாடு உருவாக்கி வருகிறது. இது பல மென்பொருள் நிறுவனங்களைத் தங்களது அலுவலகங்களைத் தென்னிந்தியாவில் அமைத்திட ஈர்க்கிறது.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்

தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DOTE) தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் (பாலிடெக்னிக் கல்லூரி) மூலம் பட்டயப் படிப்புகள், பின்பட்டயப் படிப்புகள், பட்டப் படிப்புகள், முதுநிலைப் பட்டப்படிப்புகள், ஆய்வுப் பட்டங்கள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைகளுக்கான கல்விச் சான்றிதழ்களை ஆய்வு செய்து, சேர்க்கைகளுக்கான அனுமதிகளை ஒழுங்குபடுத்தி அனுமதி அளிக்கிறது. இது தவிர தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்காளம் முதலிய கணக்கிடல் சார் படிப்புகளையும் சீர்ப்படுத்துகிறது.

ஆளுமை

தமிழ்நாடு அரசால் பல திட்டங்கள் பள்ளிக்கல்வியில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன.[10]
  • மதிய உணவுத் திட்டம்
  • அங்கன்வாடித் திட்டம் (ECCE)
  • பெண்கல்வி
  • கணினிக் கல்வி
  • மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி (IED)
  • தொடக்க நிலையில் பெண்களுக்கான தேசியக் கல்வித் திட்டம் (NPEGEL)
  • கஸ்தூரிபாய் காந்தி பால்க வித்யாலயா (KGBV)
  • கல்விச் செயற்கைக்கோள் (EDUSAT)
  • இலவசப் பாடநூல் வழங்கல்
  • இலவச சீருடை வழங்கல்
  • இலவச பேருந்துப் பயணம்

தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள்

தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் 2009-2010 ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி
  • பல்கலைக்கழகங்கள் : 65
  • கலை,அறிவியல் கல்லூரிகள் : 578
  • மருத்துவம் : 20
  • பல்மருத்துவர் :18
  • மருந்தியல் கல்லூரிகள் : 41
  • முடநீக்குச் சிகிச்சை : 31
  • செவிலியர் பயிற்சி : 113
  • OccupationalTherapy : 2
  • இந்திய மருந்தியல் நிறுவனங்கள் : 24
  • பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் : 472
  • பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் : 366
  • விவசாயக் கல்லூரிகள் : 11
  • கால்நடை மற்றும் மீன்வளம் : 4
  • சட்டக்கல்லூரிகள் : 9
  • சிறப்புக் கல்விக்கான கல்லூரிகள் : 172
  • கல்வியியல் கல்லூரிகள் : 645
  • தொழிற்பயிற்சிப் பள்ளிகள் : 782
  • சிறப்புப்பள்ளிகள் : 88
  • பிற தொழில்கல்வி நிறுவனங்கள் : 912
  • பொதுக் கல்வி நிறுவனங்கள்(பள்ளிகள்) : 53631
  • மேல்நிலைப் பள்ளிகள் : 5343
  • உயர்நிலைப் பள்ளிகள் : 4996
  • நடுநிலைப் பள்ளிகள் : 9996
  • தொடக்கப் பள்ளிகள் : 33326

No comments:

Post a Comment